ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ள தென்னாப்பிரிக்க வீரர்களை மீட்க முனைப்பு!
உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போராடுவதற்காக ஈர்க்கப்பட்ட 17 பேர் கொண்ட குழுவில் 11 பேர் விரைவில் வீடு திரும்ப உள்ளதாக தென்னாப்பிரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
நான்கு பேர் கடந்த வாரம் நாட்டிற்குத் திரும்பிய நிலையில், இன்று தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசாவின் (Ramaphosa) அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இருவர் ரஷ்யாவில் இருப்பதாகவும் அதில் ஒருவர் மொஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க ஆண்கள் வேலை வாக்குறுதிகளுடன் ரஷ்யாவிற்குள் ஈர்க்கப்பட்டு பின்னர் போர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ராமபோசா புட்டினுடன் தொலைபேசியில் உரையாடி அவர்களை மீட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கென்ய உளவுத்துறை அறிக்கை, உக்ரைனில் நடந்த போரில் ரஷ்யாவின் பக்கம் போராட 1,000 க்கும் மேற்பட்ட கென்யர்கள் பணியமர்த்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ரஷ்யாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கென்யாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





