“பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு”
அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை (United States Pacific Fleet) தளபதி அட்மிரல் Stephen T. Koehler, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை இன்று ( 19) சந்தித்து கலந்துரையாடினார்.
பாதுகாப்பு அமைச்சில் மேற்படி சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது பசுபிக் பிராந்தியத்தில் உருவாகிவரும் பாதுகாப்பு சூழ்நிலைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
உருவெடுத்து வரும் கடல்சார் சவால்களை சமாளிப்பதற்காக நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்பதில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை வெளியிட்டனர்.
கடல்சார் துறை விழிப்புணர்வை மேம்படுத்துதல், தகவல் பகிர்வை வலுப்படுத்துதல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதாபிமான அவசரநிலைகளுக்கு ஒருங்கிணைந்த பதிலளிப்பை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் கூட்டு முயற்சிகளை அதிகரிப்பதின் அவசியத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
சர்வதேச குற்றச்செயல்கள், சட்டவிரோத கடத்தல் உள்ளிட்ட பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக அமெரிக்க பிரதிநிதிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும், அமெரிக்க மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையிலான பயிற்சி பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பும் இதன் போது ஆய்வு செய்யப்பட்டது.
அமெரிக்க அரசாங்கத்தின் நீண்டகால ஆதரவு மற்றும் நன்கொடைகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
குறிப்பாக 10, TH-57 Sea Ranger ஹெலிகொப்டர்கள், B-Type Reliance Class 210 feet Cutter கப்பல், ‘டித்வா’ சூறாவளி நிவாரண நடவடிக்கைகளுக்கான நன்கொடைகள் மற்றும் பல்வேறு அனர்த்த நிவாரண மற்றும் மனிதாபிமான உதவி முயற்சிகளின் கீழ் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுகள் ஆகியவற்றை அவர் முக்கியமாக குறிப்பிட்டார்.
அமெரிக்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் உட்பட தூதரக அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.





