“பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு சமாதி கட்டுக: கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை Terrorism Prevention Act முழுமையாக நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு’ எதிர்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தனது கையொப்பத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,
“பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்கவும், இளைஞர்களைக் காரணமின்றி சிறையிலடைக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கறுப்புச் சட்டமாகும்.
இப்போது அதற்குப் பதிலாக அதைவிட மோசமான ‘அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற பெயரில் புதிய அடக்குமுறைச் சட்டத்தை திணிக்க அரசு முயல்கின்றது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.” – என்றார்.
இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நசுக்க இச்சட்டங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
போராட்டத்தின் இறுதியில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய ஆவணங்கள், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.





