ஆஸ்திரேலியா- இரும்புத் தாது உரிமை கோரலில் 1.1 பில்லியன் இழப்பீடு கோரும் பழங்குடியினர் குழு

முறையான ஒப்பந்தம் இன்றி நிலத்திலிருந்து இரும்புத்தாதுவை எடுக்க ஃபோர்டெஸ்கியூ நிறுவனத்துக்கு மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, மாநில அரசிடமிருந்து ஆஸ்திரேலியப் பழங்குடியின அமைப்பு 1.1 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர் (S$1.5 பில்லியன்) இழப்பீடு கோரியுள்ளது.
இந்த விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் புதன்கிழமை (பிப்ரவரி 19) காட்டின.
சாலமன் சுரங்கத் தொழில் நடுவத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் தனது நிலமும் மக்களும் வெகுவாகப் பாதிப்படைந்திருப்பதாக யின்ஜிபார்ன்டி நுரா பழங்குடியினர் அமைப்பு கூறியது.
கலாசாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடும், பொருளியல் பாதிப்புக்கு $678 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.
யின்ஜிபார்ன்டி நுரா பழங்குடியினர் அமைப்பு தொடுத்துள்ள இந்த வழக்கு மற்ற அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற மற்ற அமைப்புகளும் இழப்பீடு கோரி வழக்கு தொடுக்கக்கூடும்.இந்த வழக்கு தொடர்பாக இவ்வாண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.