முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஈழத்து மக்களாக ஒன்றிணைவோம்!
“இவ்வருடத்துக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து ஈழத்து மக்களாக நினைவுகூர வேண்டும்.”
இவ்வாறு தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், அறைகூவல் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ 2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவுகூரும் வகையில் 2026 மே 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் மீண்டும் ஒன்று கூட இருக்கின்றோம்.
இந்த நிகழ்வில் கட்சி, மதம், பிரதேசம் போன்ற குறுகிய மனப்பான்மைகளை கடந்து, ஈழத்து மக்களாக ஒன்றிணைய வேண்டும்.
நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்பமாக எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் சிரமதானப் பணிகளும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
வாரம் முழுவதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் மூலம் இந்த நினைவேந்தலை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படவுள்ளோம்.
புலம்பெயர் தேசங்களில் வாழும் அத்தனை தமிழ் உறவுகளும் ஒன்றிணைந்து, மே 18ஆம் நாளை தமிழ் இன அழிப்பு நாள் என உலகிற்கு உரத்துச் சொல்ல வேண்டியது அவசியம்.” – என்றார்.





