மலையக மக்களுக்காக ஜி.எஸ்.பி. வரி ஆயுதத்தை கையிலெடுங்கள்: பிரான்ஸ் தூதுவரிடம் மனோ கோரிக்கை!
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பர்டுக்கும் Remy Lambert , தமிழ் முற்போக்கு கூட்டணியின் Tamil Progressive Alliance (TPA பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் Mano Ganesan இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போது சமகால அரசியல், பொருளாதார விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளன.
தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களான பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, மற்றும் புஷ்பநாதன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேற்படி சந்திப்பு தொடர்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
டித்வா தித்வா பேரழிவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாக இருந்தபோதிலும், மலையக தமிழ் மக்களுக்கு அரசின் மீள்-கட்டெழுப்பல் (Rebuilding SriLanka) வீடமைப்பு திட்டத்தின் கீழ் திட்டமிட்ட முறையில் விலக்கி வைக்க படுகிறார்கள் என்பதை தூதருக்கு உண்மை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம்.
அரசின் உத்தியோகபூர்வ உறுதிமொழிகள் இருந்தபோதிலும், இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டிய ரூ. 5 மில்லியன் நிதியுதவியும், காணி ஒதுக்கீடும், பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்பட்டுவருகிறது. இது கவனயீனம் அல்ல. இது திட்டமிட்ட பாகுபாடு ஆகும்.
மலையக சமூகத்துக்கே உரிய, இன்னும் தீர்க்கப்படாத அநீதிகள் குறித்து விவாதிக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி, மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்க பலமுறை கோரிய போதும், அந்த கோரிக்கைகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாகுபாட்டு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மலையக இலங்கை மக்களுக்கு சம உரிமை, சம வளங்கள், சம மரியாதை உறுதி செய்யவும், இலங்கை அரசுடன் கூடிய தனது நல்லுறவுகளை, பிரான்ஸ் பயன் படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.
மேலும், முன்னணி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகிய பிரான்ஸ், மலையக தமிழ் சமூகத்தின் காணி, வீட்டு உரிமைகள், இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால், வழங்கப்படும் ஜீஎஸ்பி+ வரி சலுகைகளுக்கான நிபந்தனைகளாக முன்வைக்க படவேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்றும் நாம் கோரிக்கை விடுத்தோம்.





