காசாவில் தொடரும் பெரும் அவலம் – பசியால் வாடும் மக்கள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
காஸாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிப் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும் அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிடைக்கும் நிவாரணப் பொருட்கள், அங்குள்ள மக்களின் தேவையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பூர்த்தி செய்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசுஸ் (Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில், கூடுதல் உதவிகள் காஸாவுக்குள் செல்லத் தொடங்கியுள்ளன. எனினும் அங்குள்ள தேவையுடன் ஒப்பிடுகையில் நிவாரணப் பொருள்களின் அளவு மிகவும் குறைவாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காஸாவில் சுமார் 600,000 பேர் கடுமையான பட்டினியால் வாடுவதாக ஐ..நா அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
காஸாவுக்குள் வரும் நிவாரணப் பொருள்களின் எண்ணிக்கை இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க போதுமானதாக இல்லையென டெட்ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
சமாதான உடன்படிக்கைக்கு அமைய நாளாந்தம் 600 லொறிகளில் உதவிப் பொருள்கள் காஸாவுக்குள் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காஸா அதிகாரிகளின் தகவலின்படி, நாளாந்தம் 89 லொறிகள் மட்டுமே காஸாவுக்குள் வருகின்றன.
இதன் காரணமாக, காஸாவை எகிப்துடன் இணைக்கும் ராஃபா எல்லையைத் திறந்து, கூடுதல் உதவிகள் தடையின்றி செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.





