பெல்ஜியம்,டச்சு மற்றும் இங்கிலாந்து அதிகாரிகளால் முடக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்

பெல்ஜியம், டச்சு, பிரிட்டிஷ் அதிகாரிகளின் முயற்சியில் ஐரோப்பிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் முடக்கப்பட்டுள்ளது. கும்பலுடன் சம்பந்தப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டதோடு 5 மில்லியன் யூரோ ($5.8 மில்லியன்) கைப்பற்றப்பட்டது.
கடத்தல் கும்பல் பெரும்பாலும் கெட்டமைன் போதைப் பொருளைக் கடத்தியது. அதோடு கொக்கைன், ஹெராயின் போன்ற போதைப் பொருள்களை அஞ்சல் பொட்டலங்கள் போன்றவற்றில் அவர்கள் மறைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பெல்ஜியத்தில் 9 வீடுகளும் பிரிட்டன், நெதர்லாந்தில் இரண்டு வீடுகளும் செவ்வாய்க்கிழமை சோதனை செய்யப்பட்டன.
கடத்தல்காரர்கள் மேற்கு ஐரோப்பாவில் மட்டும் செயல்படவில்லை என்றும் உலகின் பல்வேறு வட்டாரங்களில் அவர்கள் பரவியிருந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனரக வாகனங்கள், சரக்குகள், அஞ்சல் பொட்டலங்கள் என கண்டுபிடிக்க முடியாத வகையில் ஐரோப்பாவுக்குள் அவர்கள் போதைப் பொருளைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
அனைத்துலக அளவிலான கொக்கைன் வர்த்தகம் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கடந்த மாதம் குறிப்பிட்டது.