சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பயணிகள் படுகாயம்
திருகோணமலை – சேருநுவர, மகிந்தபுர சந்தி பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற சமயம் பேருந்தில் 21 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக சேருநுவர மற்றும் முத்தூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





