பிரித்தானியாவில் 11 புகலிட ஹோட்டல்கள் அதிரடியாக மூடப்படுகின்றன
இந்த நாடாளுமன்ற காலத்திற்குள் அனைத்து புகலிட விடுதிகளையும் மூடுவதாக அளித்த உறுதியின் ஒரு பகுதியாக, இந்த வாரம் 11 ஹோட்டல்கள் மூடப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு புகலிடம் கோருவோருக்குத் தங்குமிடமாக ஹோட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அது தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. சிலர் இங்கு ஆடம்பர வாழ்க்கை வழங்கப்படுவதாகக் கூறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தியுள்ளனர்.
அரசாங்க தகவலின்படி, தற்போது சுமார் 200 ஹோட்டல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 30,000 பேர் தங்கியுள்ளனர். மேலும் 70,000-க்கும் மேற்பட்டோர் பகிரப்பட்ட குடியிருப்புகள் மற்றும் இராணுவ முகாம்கள் போன்ற இடங்களில் வசித்து வருகின்றனர்.
சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. 2024 ஆகஸ்டில் ரோதர்ஹாமில், ஒரு ஹோட்டலுக்கு தீவைக்க முயற்சி செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், நீண்டகால தங்குமிடமாக ஹோட்டல்கள் பொருத்தமற்றவை என அகதி நல அமைப்புகள் கூறுகின்றன. மேலும், இந்த அமைப்பு செலவுசெய்யும் முறையில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், “Future Asylum Accommodation Contracts” எனப்படும் புதிய ஒப்பந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுமார் £10 பில்லியன் மதிப்புள்ள இந்தத் திட்டம், ஹோட்டல் தங்குமிடங்களுக்கு மாற்றாக புதிய வசதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால், புதிய ஒப்பந்தங்கள் செலவை அதிகரிக்கக்கூடும் என சில வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
அதேவேளை, வெளிநாட்டு உதவி நிதியில் இருந்து ஒரு பகுதி புகலிடச் செலவுகளுக்காக பயன்படுத்தப்படுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் உலகளாவிய மனிதாபிமான திட்டங்களுக்கு நிதி குறைவாகும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும், தங்குமிடச் செலவுகளை குறைக்கவும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஹோட்டல்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




