முல்லைத்தீவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி போராட்டம்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவு மக்களால் கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதியன்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒவ்வாமை காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
எனினும் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி, போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தின் பின்னர் முல்லைத்தீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜாதிபதி செயலகத்திற்கும் அதன் பிரதிகள் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் அதிகளவான பொலிஸார் பாதுகாப்பில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





