மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா ரணில்? அவரின் திட்டம் என்ன?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் வரமாட்டார் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் நெருக்கத்துக்குரிய அரசியல் சகாக்களில் ஒருவராக ராஜித சேனாரத்ன விளங்குகின்றார்.
சஜித் தரப்புடன் பயணித்த அவர் தற்போது மீண்டும் ரணில் பக்கம் தாவியுள்ளார்.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன கூறியவை வருமாறு,
“ நாடாளுமன்றம் வருவதற்குரிய தேவைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை. இது பற்றி அவர் என்னிடமும் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க இருந்திருந்தால் நாட்டில் சிறந்த நிலை ஏற்பட்டிருக்கும் என மக்கள் தற்போது கருதுகின்றனர். அவரை தோற்கடித்தது குறித்து மக்கள் வருந்துகின்றனர்.” – என்றார்.
எனினும், எதிரணியை ஒன்றிணைத்து அதற்குரிய அரசியல் தலைமைத்துவம் மற்றும் ஆலோசனை வழங்கும் பணியை ரணில் விக்கிரமசிங்க தற்போது முன்னெடுத்துவருகின்றார் என ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





