அமெரிக்க ஆதரவு தாமதமானதால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை நிறுத்திய பிரித்தானியா
அமெரிக்காவின் உறுதிப்படுத்தல் தாமதமானதைத் தொடர்ந்து, சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை பிரித்தானியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
முன்னர் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதனை இரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரமர் ஸ்டார்மரை வலியுறுத்தியிருந்தார்.
பிரித்தானிய பிரதேசத்தின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு வழங்கும் இந்த ஒப்பந்தத்தை தாங்கள் முழுமையாகக் கைவிடவில்லை என்றும், ஆனால் எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலவகாசம் முடிந்துவிட்டது என்றும் அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும், மே மாத நடுப்பகுதியில் நடைபெறும் மன்னரின் உரையில் ஒரு புதிய சாகோஸ் சட்டமூலம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் சட்டமாக்கப்படுவதற்குத் தேவையான சட்டப்பூர்வ அவசியமான, முறையான கடிதப் பரிமாற்றத்தை அமெரிக்காவிடமிருந்து பிரித்தானியா இன்னும் பெறவில்லை என்று அறியப்படுகிறது.
உத்தியோகப்பூர்வமான பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசம் என்று அழைக்கப்படும் சாகோஸ் தீவுகள், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன, மேலும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பிரித்தானியா அவற்றைக் கட்டுப்படுத்தி வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பிரித்தானியா அந்தப் பிராந்தியத்தின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு விட்டுக்கொடுக்கும், மேலும் மிகப்பெரிய தீவான டியாகோ கார்சியாவில் உள்ள பிரித்தானிய-அமெரிக்காவின் கூட்டு இராணுவத் தளத்தை மீண்டும் குத்தகைக்கு எடுப்பதற்காக ஆண்டுக்குச் சராசரியாக £101 மில்லியன் ($136 மில்லியன்) தொகையைச் செலுத்தும்.





