திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 2004 சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் நினைவேந்தல்!!
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, சுனாமி மற்றும் பிற இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கையில் தேசிய பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுவதாகவும், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நோக்கிலும், பேரழிவு தயார்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும் இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் என மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





