நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு
நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 05 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்காக அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இம்முறை வாக்காளர் விபரங்களைச் சேகரிப்பதற்காக கிராம சேவை உத்தியோகத்தர்கள் வீடுகளுக்கு வருகை தரமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியவர்கள் அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள், சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகம் அல்லது தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று அந்தப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்காளர் உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள தகுதியுள்ள பிரஜைகள் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





