தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் 17 ஆம் திகதி நில அளவீடுகள் முன்னெடுக்கப்படும் என்று கடற்தொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எமது அரசு மிகுந்த முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.
தற்போது விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளுக்குரிய 17 உரிமையாளர்கள் உறுதிப்பத்திரங்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது காணி எல்லைகளைத் துல்லியமாக அடையாளப்படுத்துவதற்காக வரைபடம் ஒன்று அவசியமாக உள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 9 மணியளவில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளினால் காணி அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பூமியை உரிய மக்களிடம் ஒப்படைப்பதற்கு அரசு என்ற ரீதியில் நாம் தயாராக இருக்கின்றோம். வெகுவிரைவில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.” – என்றார்.
இதன்போது, தையிட்டி விகாரை விவகாரத்தில் நாக விகாரை விகாராதிபதியின் தலையீடு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர்,
“பௌத்த மதத்தில் பல்வேறு மகா சங்கங்கள் காணப்படுகின்றன. நாக விகாரையும் திஷ்ஷ விகாரையும் வெவ்வேறு மகா சங்கங்களின் கீழ் இயங்குகின்றன.
அவர்களுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அவை குறித்துப் பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. மக்களின் காணிகளை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான இலக்கு” – என்று தெரிவித்தார்.





