உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து!
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைத் தொடர்வதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை சரியான நேரத்தில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்–இலங்கை கூட்டு ஆணையம் 27வது அமர்வு கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றபோது இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.
ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தின் கீழ் உள்ள 27 முக்கிய சர்வதேச உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் தமது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அவற்றின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காலமுறைப்படி தகவல் வழங்கவும் இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சலுகைச் சுழற்சி நிறைவடைந்ததும், மீண்டும் இந்த வரிச் சலுகைக்காக விண்ணப்பிக்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்தோ–பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் உறுதி தெரிவித்தனர்.
மேலும், “Global Gateway” மூலோபாயத்தின் கீழ் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
காணாமல் போனோர் பணியகம், இழப்பீட்டு பணியகம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நிறுவனங்கள் மூலம் நல்லிணக்கத்தை மேம்படுத்த இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கிலும் தொடர்ந்து ஒத்துழைக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த பிரஸ்ஸல்ஸ் நகரில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கூட்டு ஆணையக் கூட்டத்தில் இந்த முன்னேற்றங்கள் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் Aruni Ranaraja) மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் ஆசியா–பசுபிக் பிராந்திய செயல் நிர்வாக இயக்குநர் பாவோலா பம்பலோனி ஆகியோர் தலைமை தாங்கினர்.




