வரி விவகாரம்: இந்தியா, அமெரிக்க பேச்சு ஒத்திவைப்பு!
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்கா USA மற்றும் இந்தியாவுக்கிடையில் India இன்று (23) வாஷிங்டனில் Washington நடைபெறவிருந்த பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய வரி விகிதங்களை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் President Trump கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாது இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க சட்டத்தின் 122-வது பிரிவின் கீழ் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிப்பு விடுத்தார்.
அடுத்த சில மணி நேரத்தில் வரி விகிதம் 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று அவர் உத்தரவிட்டார்.
அமெரிக்க அரசின் புதிய வரி விகிதம் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றது.
அதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி இந்தியாமீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இம்மாத ஆரம்பத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் Prime Minister Narendra Modi, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய பொருட்கள் மீதான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்தார்.
இது தொடர்பாக இரு நாடுகள் இடையே மார்ச் மாதம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு முன்னோட்டமாக இந்திய பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே வாஷிங்டனில் இன்று பேச்சு நடைபெற இருந்தது.
எனினும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ட்ரம்பின் 15 சதவீத கூடுதல் வரி விதிப்பு என்பவற்றால் தற்போது குழப்பமான சூழல் நீடிக்கிறது.
இந்நிலையிலேயே பேச்சு பிற்போடப்பட்டுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான புதிய திகதி பின்னர் முடிவு செய்யப்படும் என தெரியவருகின்றது.




