கிழக்கு மாகாணத்தில் 2500 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை!
கிழக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக 2500 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார்.
நொச்சிக்குளம் தமிழ் கலவன் பாடசாலை, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை,மொரவெவ ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம்,மொரவெவ பிரதேச சபை போன்ற இடங்களுக்கு சென்று அங்குள்ள குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கிழக்கு மாகாணத்தில் 5000 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்ற போதிலும் எதிர்காலத்தில் புதிதாக 2500 பேருக்கு மிக விரைவாக ஆசிரியர் நியமனங்களை வழங்க அமைச்சரவை பத்திரம் பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சிங்கள மொழியை போன்று தமிழ் மொழி பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் போது ஐந்து வருடங்கள் கட்டாயமாக சேவையாற்ற வேண்டும் எனவும் கல்வி மற்றும் சுகாதார செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இனி காணப்படாது எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த கள விஜயத்தின்போது மொரவெவ பிரதேச சபை தவிசாளர் கே தனுஷ்க மற்றும் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.





