ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட அமைச்சரவை மற்றும் சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் 07 ஆம் திகதி காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நவம்பர் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது.
அதற்கு முன்னதாகவே அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி, பாதீட்டு உரைக்கு அனுமதி பெறுவதற்காக விசேட அமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ளது.
ஜனாதிபதியின் வரவு- செலவுத் திட்ட உரை 2ஆம் வாசிப்பாக கருதப்படும். 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெறும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, பாதீட்டு கூட்டத்தொடர் நடக்கும் காலப்பகுதியில் சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டமொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இக்கூட்டம் நடைபெறவுள்ளது என கொழும்பு தகவல் தெரிவிக்கின்றது.




