“புத்தாண்டில் புதிய அமைச்சை கோருகிறார் சஜித்”
“இவ்வருடத்திலாவது இடர் முகாமைத்துவ விடயத்தை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றி, இதன் கீழ் புதிய நிறுவனங்களை ஸ்தாபிக்க வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (01) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பலர் காணாமல் போயுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு நடந்த துயர் மிகு நிலையை நாம் மறந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவ வேண்டும்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக இப்புத்தாண்டிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாக்குறுதியளித்த சகல நிவாரணங்களையும் உரிய முறையில் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றேன்.
அதேவேளை, நாட்டின் இடர் முகாமைத்துவ திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
இவ்வருடத்திலாவது இடர் முகாமைத்துவ விடயத்தை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றி, இதன் கீழ் புதிய நிறுவனங்களை ஸ்தாபிக்க வேண்டும்.
நிதி, பௌதீக மற்றும் மனித வளங்களை இவற்றுக்குப் பெற்றுக் கொடுத்து, வினைத்திறனான இடர் முகாமைத்துவ வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.





