ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு வாகனங்கள் வழங்க வேண்டாம் – கடும் எச்சரிக்கை
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்க வேண்டாம் என வாகன உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு பொலிஸார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்கள் தொடர்புடைய பல விபத்துகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டு ஏழு கடுமையான விபத்துகள், 78 சிறிய காயங்கள் மற்றும் ஆறு வாகன சேதச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பது பொலிஸாரின் முக்கிய பொறுப்பும் சட்டப்பூர்வ கடமையும் ஆகும் என பொலிஸ்
செய்தித் தொடர்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
வாகன உரிமையாளர்கள் மற்றும் வாடகை வழங்குநர்கள், ஓட்டுநர்கள் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், காப்பீடு, வருவாய் உரிமம், புகை வெளியேற்றச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களை கொண்டுள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வாகனத்தில் இயந்திரக் குறைபாடுகள் உள்ளதாக என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வாகனம் இயக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். உரிமம் இல்லாத வெளிநாட்டு நபர் அல்லது சிறுவர் ஒருவருக்கு வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டால், ஓட்டுநரும் வாகன உரிமையாளரும் இருவரும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தெற்கு மாகாணத்தில் இதனை உறுதி செய்ய சிறப்பு சோதனைகள் மற்றும் போக்குவரத்து கண்காணிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஓட்டுநர்கள் சர்வதேச ஓட்டுநர் அனுமதி, அல்லது மோட்டார் போக்குவரத்துத் துறையால் வழங்கப்பட்ட இலங்கை ஓட்டுநர் அனுமதி, அல்லது வெளிநாட்டு உரிமத்தை மாற்றியமைத்த சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
போலியான அல்லது செல்லாத உரிமங்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும் விதிமுறைகளை மீறினால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





