மாத்தறை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் பலி
மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் இன்று (21) பிற்பகல் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
காரொன்றில் வருகை தந்த இருவர் இந்தத் துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தின் போது காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 மி.மீ ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகள் மூலம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக
பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘டிலைட்’ என்று அழைக்கப்படும் 55 வயது மீன் வியாபாரி என்று கூறப்படுகிறது.
அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





