வவுனியாவில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு: விசாரணை தீவிரம்!
வவுனியாVavuniya , ஈரற்பெரியகுளம் பகுதியில் மயானம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பது தொடர்பாக இன்று காலை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடலின் ஒரு பகுதி தீயினால் எரிந்த நிலையில் காணப்படுவதுடன், உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக சோதனைகள் நடத்தப்பட்டன.
மரணத்துக்கான காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் ஈரற்பெரியகுளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.





