காசாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் இஸ்ரேல் இராணுவம்

காசா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் நிவாரணப் பெட்டிகள் கீழே விடப்படும் காட்சிகளை இஸ்ரேல் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன பகுதிகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளை தணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், காசாவுக்கு மீண்டும் விமான உதவித் திட்டங்களை தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், சமீபகாலமாக காசாவுக்கான அனைத்து நிவாரணப் பொருள்களின் அனுப்புதலையும் நிறுத்தியிருந்தது. இதன் விளைவாக, சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தீவிரமான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டனர்.
சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது மீண்டும் உணவு மற்றும் அவசர நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், விநியோக மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நேரடியாக உதவி வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், காசா மக்களின் நிலையை சிறிதளவாவது சீரமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.