கனடாவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தவறுதலாக குண்டு பாய்ந்து இந்திய மாணவி பலி

கனடாவில் உள்ள ஆண்டாரியோ மாநிலத்தில் உள்ள ஹமில்டன் நகர மொஹ்வாக் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவியான ஹர்சிம்ரத் ரான்தவா துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காகக் காத்திருந்தார்.அப்போது, இரு கார்களில் வந்த நபர்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரான்தவா மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.இதில் படுகாயமடைந்த ஹர்சிம்ரத்தை மீட்ட அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, “ஹாமில்டனில் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரான்தவாவின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். மாணவியின் குடும்பத்தினர் உடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்,” என்று டொரோன்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்தது.
கனடாவில் கடந்த நான்கு மாதங்களில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
2024 டிசம்பர் 1ஆம் திகதி பஞ்சாப்பின் லூதியானாவைச் சேர்ந்த 22 வயது முதுகலை மாணவர் குராசிஸ் சிங் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பஞ்சாப்பைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவி ரித்திகா ராஜ்புத் மரம் விழுந்து இறந்தார். டிசம்பர் 6ஆம் திகதி, எட்மண்டனில் 20 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஷன்தீப் சிங்கை ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது. கடைசியாக ஏப்ரல் 19ஆம் திகதி இளம் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரான்தவா, 21, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.