உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து முன்னேறும் இந்தியா!
உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவற்றை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் S. Jaishankar. தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
” உலக நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் பெரும் மாற்றங்கள் இடம்பெற்றுவருகின்றன.
கோவிட்19, பொருளாதார சவால்கள், பருவநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை உலக நாடுகள் எதிர்கொண்டன.
இவ்வாறான உலகளாவிய சவால்களையும், நெருக்கடிகளையும் இந்தியா துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய பல நெருக்கடிகளை இந்தியா முறியடித்து முன்னேறி வருகிறது.
உலக அரசியல் மாறி வருவதற்கு ஏற்ப, சில நாடுகளால் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியவில்லை.
தொழில்நுட்பம், எரிசக்தி, ராணுவத் திறன், இணைப்பு வசதிகள், வளங்கள் ஆகிய அனைத்தும் இன்று போர்க்கருவிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
இந்தியா பல்வேறு உலகளாவிய அதிர்ச்சிகளிலிருந்து மீள்திறன் கொண்ட ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதே உண்மை.” எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.





