புயலுக்கு பின் இலங்கையை கட்டியெழுப்புவதில் பாரிய பங்கு வகிக்கும் இந்தியா மற்றும் சீனா!
இலங்கையை உலுக்கிய டித்வா சூறாவளியினால் சுமார் 04.1 பில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் புயலுக்கு பிந்தைய மறுகட்டமைப்பு முயற்சிகளில் இந்தியாவுடன் சேர்ந்து சீனாவும் முக்கிய பங்கு வகிப்பதாக உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்மையில் இருநாட்டு தலைவர்களும் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இந்த விஜயத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது புயலுக்கு பின் நாட்டை கட்டியெழுப்ப இந்தியா நிதியுதவி அளிக்கும் என உறுதியளித்திருந்தார். இதற்கமைய ஏற்கனவே 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய இந்திய அரசாங்கம் பின்னர் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாகவும், சலுகை கடன் அடிப்படையிலும் வழங்க தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே இந்திய அமைச்சர் ஜெய்சங்கரின் விஜயத்தை தொடர்ந்து சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்றும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
“இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்” திட்டத்தின் கீழ் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க சீனா எப்போதும் தயாராக உள்ளது,” என்று வாங் ஜுன்ஷெங் (Wang Junzheng) அறிவித்துள்ளார்.
இவ்வாறாக இரு நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வாரி வழங்குவதற்கு பின்னணியில் அரசியல் ரீதியான காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எவ்வாறாயினும் இலங்கை இருநாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் இவ்விரு நாடுகளும் இலங்கைக்கு உதவுவதில் பாரிய பங்கு வகிப்பதாக குறிப்பிடப்படுகிறது.





