“நிர்வாண புகைப்படங்கள் வெளியானால்” – தொழில்நுட்ப நிறுவனங்களை எச்சரிக்கும் பிரித்தானியா!
சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் தளங்கள் ஊடாக பரப்பப்படும் நிர்வாண புகைப்படங்களை முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுக்கும் வகையில் புதிய சட்டவிதியொன்று பிரித்தானியாவில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சைபர்ஃப்ளாஷிங் (Cyberflashing )குற்றங்களுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
புதிய சட்டமானது இவ்வாறான குற்றங்களை தடுக்கும் அதிக பொறுப்பை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்குகிறது. புதிய சட்டத்திற்கு இணங்கத் தவறும் தளங்கள் கணிசமான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும்.
குறித்த நிறுவனங்களின் உலகளாவிய வருவாயில் சுமார் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படலாம். அல்லது பிரித்தானியா முழுவதும் அவர்களது சேவை தடைப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சமீபகாலமாக ஏராளமான இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆன்லைன் துஷ்பிரயோகத்தை தடுக்கவும், சிறுவர்களை பாதுகாக்கவும் அந்நாட்டு அரசாங்கம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





