சிறையிலிருந்து தப்பிய பாலியல் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் காவல்துறைத் தலைவர்

அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாநிலத்தில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து சிறைக் கைதி ஒருவர் தப்பியதை அடுத்து அவரைத் தேடிப் பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கொலை, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களுக்காக 80 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 56 வயது கிரான்ட் ஹார்டின், போலி சட்ட அமலாக்கத்துறை சீருடை அணிந்து சிறையிலிருந்து வெளியேறித் தப்பியதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 1,000 சிறைக் கைதிகள் உள்ளனர்.ஹார்டின் தப்பித்து கிட்டத்தட்ட 15லிருந்து 20 நிமிடங்கள் கழித்து அவரைக் காணவில்லை என்று அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.50 மணி அளவில் ஹார்டின் சிறையிலிருந்து தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து, தேடும் பணிகள் தொடங்கின.
ஹார்டின், முன்பு அர்கன்சாஸ் மாநிலத்தில் உள்ள கேட்வே நகரின் காவல்துறைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் அபாயகரமானவர் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹார்டினுக்கு அந்தச் சீருடை எவ்வாறு கிடைத்தது என்பதை கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.அவர் தப்பிச் சென்றபோது கனமழை பெய்துகொண்டிருந்ததால் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி அவரைத் தேடுவது கடினம் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் கனமழை பெய்துகொண்டிருந்ததால் ஆளில்லா வானூர்திகளையும் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
ஹார்டின் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது அவர் பலமுறை பதவி இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாலும் வேலையை ஒழுங்காகச் செய்யாததாலும், பொய் அறிக்கை தயாரித்ததாலும் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகம் தெரிவித்தது.
ஜேம்ஸ் எப்பல்டன் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்கு 2017ஆம் ஆண்டில் ஹார்டின் கைது செய்யப்பட்டார்.அவருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.அவர் சிறையில் இருந்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று ஆர்கன்சாஸ் மாநிலத்தின் ராஜர்ஸ் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியரான ஏமி ஹாரிசனிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரை ஹார்டின் பாலியல் வன்கொடுமை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
பாலியல் வன்கொடுமை, கடத்தல் குற்றச்சாட்டை ஹார்டின் ஒப்புக்கொண்டார்.அவருக்குக் கூடுதலாக 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.