கியூபாவில் எரிபொருள் பதப்படுத்தும் ஆலையில் தீ விபத்து – சிக்கலில் அரசாங்கம்!
கியூபா தலைநகர் ஹவானாவில் (Havana) உள்ள ஒரு முக்கிய எரிபொருள் பதப்படுத்தும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே எண்ணெய் பற்றாக்குறையால் நெருக்கடியில் சிக்கியுள்ள கியூபாவிற்கு இந்த சம்பவம் பேரிடியாக அமைந்துள்ளது.
நிக்கோ லோபஸ் (Nico Lopez) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஹவானா (Havana) விரிகுடாவிற்கு மேலே ஒரு பெரிய புகை மூட்டம் எழும் காணொளிகள் சமூக வலைத்தளம் முழுவதும் வியாபித்துள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூபாவின் எரிசக்தி மற்றும் சுரங்க அமைச்சகம், சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ, இறுதியில் அணைக்கப்பட்டதாகவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
மேலும் தீ அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவவில்லை என்றும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கியூபா, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியையே பெரிதும் நம்பியிருந்தது. கடந்த மாதம் அமெரிக்கப் படைகளால் அந்நாட்டின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதில் இருருந்து அந்த இறக்குமதி துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கியூபா ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். மேலும், தீவுக்கு எண்ணெய் வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும் வர்த்தக வரிகளை விதிக்க அனுமதிக்கும் சமீபத்திய நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




