பிரபல பாடகி லதா வல்பொல காலமானார்
சிங்கள இசையுலகின் ‘இசை குயில்’ (Helawe Geetha Kokilaviya) எனப் போற்றப்படும் கலைஞர் கலாசூரி லதா வல்பொல தனது 91 ஆவது வயதில் இன்று காலமானார்.
அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
1934 ஆம் ஆண்டு கல்கிசையில் பிறந்த லதா வல்பொல, 1946 ஆம் ஆண்டு தனது 12 ஆவது வயதில் அப்போதைய ‘ரேடியோ சிலோன்’ (இலங்கை வானொலி) ஊடாகத் தனது முதல் பாடலைப் பாடி தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தார்.
அப்போதிலிருந்து எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக சிங்களத் திரைத்துறையின் பின்னணிப் பாடகியாகவும், இசைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
600 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது குரலால் பங்களிப்பு செய்துள்ள அவர், இலங்கையின் இசை வரலாற்றில் ஒரு ‘வாழும் புராதனச் சின்னமாகவே’ கருதப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாகப் பல விருதுகளை வென்றுள்ள அவர், இசை உலகில் என்றும் அழியாத ஒரு ஆளுமையாவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.




