நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.ஐ.டியில் முறைப்பாடு!
நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறுகோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் CID இன்று (11) முற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளரினால் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும் நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு, 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
நிலக்கரி மோசடி தொடர்பிலேயே எரிசக்தி அமைச்சருக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்திருந்தது.
நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கையில்லாப் பிரேரணை மேலதிக 110 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





