பாதீட்டு பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபா!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி, மானியங்கள் உள்ளடங்களாக மொத்த வருமானமாக 5,300 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டெழும் செலவீனம், வட்டி உட்பட மொத்த செலவீனமாக 7,057 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 1,757 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும்.
அடுத்த வருடம் 4 – 5 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15.3 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டு கடனை பெறுவதற்குரிய இயலுமையை இலங்கை பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களும் உள்ளன.
நிதி அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த படியாக பாதுகாப்பு அமைச்சுக்கும், சுகாதார அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்தது எனவும், வரி அதிகரிப்பு இடம்பெறவில்லை என ஆளுங்கட்சியினரும் கூறிவருகின்றனர்.
அதேபோல ஜனாதிபதி நீண்டநேரம் உரையாற்றி இருந்தாலும் புதிய அரசமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என எதிரணி சுட்டிக்காட்டியுள்ளது.





