முடிவுக்கு வந்தது எச்-1பி குலுக்கல் முறை
அமெரிக்காவில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த எச்-1பி விசா குலுக்கல் முறையை (Lottery System) ரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக ஊதியம் மற்றும் அதிகத் திறமை கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய சட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் இறுதி செய்துள்ளது.
இந்த புதிய ‘வெயிட்டட் அப்ரோச்’ (Weighted Approach) நடைமுறை, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 முதல் அமலுக்கு வருகிறது.
புதிய விதிகளின்படி, அதிக ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு விசா கிடைக்க நான்கு மடங்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்.
இது அமெரிக்காவில் ஆரம்பக்கட்டப் பணிகளில் சேர விரும்பும் இந்திய மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே புதிய விசா விண்ணப்பங்களுக்கு ஒரு லட்சம் டொலர் கட்டணம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் இந்திய ஐடி (IT) நிறுவனங்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்.
விசா முறையை முதலாளிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கக் குடியுரிமைத் துறை தெரிவித்துள்ளது.





