பிரித்தானிய தம்பதியருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
பிரத்தானியாவைச் சேர்ந்த தம்பதியர் ஈரானில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சசெக்ஸைச் சேர்ந்த லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகியோர் 2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றிபார்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த தம்பதியர் ஈரான் வழியாக சென்றபோது அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தம்பதியர் குறித்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
அவர்கள் தற்போது தெஹ்ரானின் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) ஈரான் அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கையை முற்றிலும் பயங்கரமானது மற்றும் நியாயப்படுத்த முடியாது என விமர்சித்துள்ளார்.
மேலும் அவர்கள் பாதுகாப்பாக இங்கிலாந்து திரும்புவதற்கு இடைவிடாமல் பாடுபடுவதாக உறுதியளித்துள்ளார்.




