இலங்கைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் வெடி குண்டு அச்சுறுத்தல்கள் – அச்சத்தில் மக்கள்
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் குண்டு இருப்பதாக அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு இன்று தகவலொன்று கிடைத்துள்ளது.
இதன்பின்னர் குறித்த பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறை உள்ளிட்ட வளாகம் இன்று அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடொன்றிலிருந்து பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தரவுக்கு குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலில், “கூடாரத்திற்குள் குண்டு ஒன்று உள்ளது. அது இன்று (29) பிற்பகல் 2:00 மணிக்கு வெடிக்கும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் உடனடியாக செயற்பட்ட பிரதேச செயலாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்தார்.
மேலும் நாவலப்பிட்டி பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவக் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவினரின்
உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கண்டறியப்படவில்லை.
இதேவேளை, அந்த இடத்திற்கு சென்ற கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்கவும் நிலைமைகளை ஆராய்ந்தார்.





