ஹார்முஸ் திறக்கப்படாவிட்டால், ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் – ஆபத்தில் ஐரோப்பிய விமான சேவை
ACI Europe அமைப்பு, அடுத்த மூன்று வாரங்களுக்குள் ஹார்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் பற்றாக்குறை உருவாகலாம் என எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பு, எரிபொருள் கிடைப்பதில் உறுப்பு நாடுகளிடையே கவலைகள் எழுந்துள்ளதாக ஐரோப்பிய ஆணையத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டால், விமான நிலைய செயல்பாடுகளும் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்படலாம் எனவும், அதனால் பொருளாதார விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பகுதி, ஐரோப்பாவின் விமான எரிபொருள் இறக்குமதியில் சுமார் 50% பங்கு வகிக்கிறது. இதனால், நிலைமை மேலும் மோசமடைந்தால், எரிபொருள் பற்றாக்குறை தவிர்க்க முடியாததாக மாறும் என அமைப்பு எச்சரித்துள்ளது.
இதனிடையே, எரிபொருள் பற்றாக்குறை அச்சத்தால் பல விமான நிறுவனங்கள் சேவைகளை குறைத்து, பயணக் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. கடந்த வாரம், ஐரோப்பிய ஜெட் எரிபொருள் விலை ஒரு டன்னுக்கு 831 டாலரிலிருந்து 1,838 டாலராக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.





