ட்ரம்புக்கு பதிலடி : அமெரிக்கா மீது வரி விதிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில், நேற்று ஐரோப்பிய நாடுகளின் பிரிதிநிதிகள் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது அமெரிக்கா மீது €93 பில்லியன் வரிகளை விதிக்கவும், அமெரிக்க நிறுவனங்களை அதன் சந்தையில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் வரை, பிப்ரவரி 1 முதல் 10 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்றும், குறித்த வரியானது ஜூன் 1 முதல் 25 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நேட்டோ நட்பு நாடுகள் மீது இவ்வாறு வரி விதிப்பது தவறு என இங்கிலாந்து பிரதமர் கடுமையாக எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





