காசாவிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற 48 மணி நேர பாதையை திறந்த இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் காசாவில் தரைவழித் தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், அப்பாவி பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கும் வகையில் தற்காலிக போக்குவரத்து பாதை திறக்கப்பட்டுள்ளது.
காசா நகரில், 3,000 ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக இஸ்ரேல் இராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர்.
எனவே ஹமாஸ் பயங்கரவாதிகளின் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றன.
பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்ட ஒரே பாதையான கடலோர அல்-ரஷீத் சாலையை இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
அந்த சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால், சலா அல்-தின் சாலை வழியாக பொதுமக்கள் வெளியேறலாம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த பாதை 48 மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்கள் தொடரும் நிலையில், பல குடும்பங்கள் வெளியேற முடியாமல் சாலையோரங்களில் சிக்கித் தவிக்கின்றன.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை ஐ.நா., மனித உரிமைகள் ஆணையமும், ஜெர்மன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன.