அமுலுக்கு வரும் அமெரிக்காவின் வரிகள் – அவசர நடவடிக்கைக்கு தயாராகும் ஆசிய நாடுகள்

அடுத்த மாதம் அமெரிக்கா அமல்படுத்தவுள்ள கூடுதல் இறக்குமதி வரிகள் முன்னிட்டு, பல ஆசிய நாடுகள் வாஷிங்டனுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கின்றன.
தென்கொரியா, வரிகள் அமலுக்கு வருவதற்கு முன், கொள்கை ரீதியான வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும்,” என தென்கொரிய வர்த்தக அமைச்சர் யோ ஹான்-கூ தெரிவித்துள்ளார்.
தாய்லந்து, அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு எதிராக பூஜ்யம் விழுக்காடு வரிகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 1ஆம் திகதிக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், தாய்லந்து 36% வரிகளைச் சந்திக்க நேரிடும்.
இந்நிலையில், அரசியல் நிலைமைகள் காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என தாய்லந்து நிதியமைச்சர் எச்சரித்துள்ளார்.
மலேசியா, அமெரிக்காவிடமிருந்து செயற்கை நுண்ணறிவு சில்லுகளுக்கான வர்த்தக அனுமதியை கோரியுள்ளது. இந்த சில்லுகளை ஏற்றுமதி செய்ய விரும்புவோர், குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன் அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.