காஷ்மீர் என்கவுன்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் சாத்ரூ பகுதியில் நயீத்காம் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த துப்பாக்கி சண்டையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெயிஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் முக்கிய தளபதியாக செயல்பட்ட சைபுல்லாவும் ஒருவர்.
அவர் ஓராண்டாக ஜீனப் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிர செயல்பாட்டுடன் இருந்து வந்ததும், பல்வேறு பயங்கரவாத சதி திட்டங்களை தீட்டி வந்ததும் தெரியவந்தது.
நேற்று காலை முதல் நடந்த இந்த என்கவுன்டரில் இன்று காலை சைபுல்லா மற்றும் மற்றொரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி மற்றும் எம்.4 ரக துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை ராணுவத்தின் ஜம்முவை அடிப்படையாக கொண்ட படையினர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.
இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே வனப்பகுதியில் பெரிய ஆயுதங்களுடன் சென்ற பயங்கரவாதிகளை பார்த்ததும் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
ஜம்முவின் அக்னூர் பிரிவில் நடந்த இந்த சண்டையில், காயமடைந்த ராணுவ வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.