தேங்காய் எண்ணெயில் கலப்படம் – 05 வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்த 05 வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீதான வழக்குகள் வியாழக்கிழமை (02) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட துடன், குற்றங்களுக்கான அபராதம் மற்றும் தண்டனை குறித்து அறிவிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 01 மற்றும் 07 ஆம் திகதிகளுக்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு பரிசோதனையின்போது கல்முனை பிரதேசத்தில் 03 வியாபார நிலையங்களிலும் சாய்ந்தமருதில் 02 வியாபார நிலையங்களிலும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து, விற்பனை செய்யப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டிருந்தது.
இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் இஸட்எம். ஸாஜித் தெரிவித்தார்





