ஆப்பிரிக்காவை உலுக்கிய கனமழை – வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, தெற்கு கிவு மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பியுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்ததால் ஏரியின் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 150 வீடுகள் சேதமடைந்துள்ளது.
அப்போது வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் மக்களும் மீட்பு படையினருடன் இணைந்தனர்.
அவர்கள் படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். இதனிடையே மீட்பு பணியின் போது 62 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 50 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அணைந்து அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீரினால் ஏற்படும் நோய் தொற்றுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற ஆபத்து அதிகரித்து வருவதாகவும் அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.





