ஆசியப் பிராந்தியத்தில் அமைதி திரும்புமா? – மலேசியாவில் ஒன்றுக்கூடும் தலைவர்கள்!
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தென்கிழக்கு ஆசியாவின் உயர்மட்ட இராஜதந்திரிகள் இன்று மலேசியாவில் ஒன்றுக்கூடவுள்ளனர்.
இதன்போது கடந்த ஜுலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த மத்தியஸ்தம் குறித்து கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டதில் இருந்து ஆசிய தலைவர்கள் ஒன்றுக்கூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த சந்திப்பிற்கு தலைமை தாங்கும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) நம்பிக்கையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
“உண்மைகளை முன்வைப்பதே எங்கள் கடமை, ஆனால் மிக முக்கியமாக, அமைதியை நிலைநாட்டுவது எனக் குறிப்பிட்ட அவர் இது தொடர்பில் இரு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுப்பதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை தாய்லாந்து பிரதிநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ( Marco Rubio), திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் ஒரு புதிய போர்நிறுத்தம் எட்டப்படும் என்று நம்புவதாகக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





