ஆவியாக வர முடியாவிட்டால் அடுத்த பிறவியில் பழி தீர்ப்பேன் – எம்.பி.யின் ஆவேசம்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டமானது அடுத்த ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்குரிய நடவடிக்கை அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
எனவே, அரசியல் பேதங்களை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் நுகேகொடையில் அணிதிரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நுகேகொடை போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு விடுத்துள்ள நிலையிலேயே சாமர எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“நுகேகொடை போராட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரானது. அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும். 2029 ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இந்தப் போராட்டத்தைத் தவறவிடக்கூடாது. ஏனெனில் இது ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்குரிய கூட்டம் அல்ல.
இந்த அரசாங்கத்துக்கு எதிராகக் கட்டாயம் எதிர்ப்பை வெளியிட வேண்டும். சிலவேளை என்னை பழிவாங்க முற்படக்கூடும். ஆவியாக வர முடியாவிட்டால் அடுத்த பிறவி எடுத்தாவது நிச்சயம் பழி தீர்ப்பேன்” எனவும் சாமர சம்பத் தஸநாயக்க மேலும் குறிப்பிட்டார்.





