இந்தியா – வயநாட்டில் கனமழை காரணமாக மீண்டும் நிலச்சரிவு

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், வயநாட்டிலும் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சுரல்மலாவின் சாலியார் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், வயநாடு மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில், வயநாடு மாவட்டத்தில் உள்ள சுரல்மலாவின் முண்டக்கை பகுதியில் திடீரென கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்குடன் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
முண்டகைப் பகுதியில் ராணுவ வீரர்களால் அமைக்கப்பட்ட பெய்லி பாலத்தின் கீழ் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த 2024 ஜூலை மாதம் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டகை, சுரல்மலா உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து 298 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், வயநாட்டில் இப்போது மீண்டும் கனமழை கொட்டி வருவதால் முண்டகை பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதை அடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு ஆற்றில் சேறு கலந்த நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மண்சரிவு ஏற்பட்டதா என அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்