பிரித்தானியாவில் ரயில்களில் பயணிப்போர் எதிர்கொள்ளும் பாரிய சவால்!
பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வேல்ஸ் (Wales ) ஆகிய பகுதிகளில் 2,661 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 13 வயதுக்கும் குறைவான பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவின் போக்குவரத்து காவல்துறை இந்த அதிகரிப்பு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பிபிசி சேகரித்த தரவுகளின்படி, 2015 ஆம் ஆண்டு முதல் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்து 37 சதவீதமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இதில் சோகமான விடயம் என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் துப்பறிவாளர்களால் ஒரு நபரை கூட இனங்காண முடியவில்லை என்பதுதான்.
இந்நிலையில் குற்றவாளிகளை விரைவாக இனங்காணும் வகையில் சிசிடிவி (CCTV) கெமராக்களை அமைக்க 17 மில்லியன் பவுண்ட்ஸுகளை ஒதுக்கியுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமின்றி மக்கள் ரயில் வலையமைப்பைப் பயன்படுத்த முடியும் என்றும் இங்கிலாந்து அரசாங்கம் கூறியுள்ளது.





