இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சஜித் எழுப்பிய கேள்வி!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகரமீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயம். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்துள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ‘ வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர தனது அலுவலகத்தில் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் பின்னர் உயிரிழந்துள்ளார்.
தவிசாளர் என்பவர் மக்கள் பிரதிநிதியொருவராவார். மக்கள் பிரதிநிதிகளால் கூட பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாவிட்டால், இது தேசிய பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையொன்றாக அமைந்து காணப்படுகின்றது.” எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.