தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்
தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுடன் தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்ப நவீனமயப்படுத்தி, அதன் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் 849 மில்லியன் ரூபா செலவிலான விசேட திட்டங்கள் வியாழக்கிழமை தபால் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தபால் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தும் நேக்குடன் 590 மில்லியன் ரூபா பெறுமதியான 10 லொறி வண்டிகள் மற்றும் 20 ‘குரு கெப்’ (Crew Cab) ரக வாகனங்கள் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டன.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக, தபால்காரர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய பொதி காவிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதுடன், தபால் நிலையங்களின் பணிகளை இலகுபடுத்தும் நோக்கில் டெஸ்க்டொப் மற்றும் லெப்டொப் கணினிகள் மற்றும் ‘டேப்’ கருவிகள் என்பனவும் வழங்கப்பட்டன.
மேலும், தபால் சேவையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு பதில் பிரிவும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“கடந்த ஆண்டு தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. சில நெறுக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பினும், இதனை பார்க்கிலும் தபால் துறையால் அதிக வருமானத் பெறலாம். இவ்வருடம் எதிர்பார்க்கப்பட்டுள்ள வருமான இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.
தபால் கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். தபால் சேவையின் முன்னேற்றத்தை விரும்புவோர் இச்சேவையை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.
தபால் சேவையை நிரந்தரமாக மூடிவிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. சகல நவீன வசதிகளையும் வழங்கி அதனை உலகத்தரம் வாய்ந்த சேவையாக மாற்றுவதே தமது நோக்கமாகும்” என்றார்.




